“நாளைக்கு நீங்களே போராட்டம் பண்ணுவீங்க...” - வானதிக்கு அமைச்சர் நேரு பதில்

 
nehru

ரூ.200 கோடியில் கோவையில் உள்ள அத்தனை சாலைகளும் மேம்படுத்தப்படும், அனைத்து நகரங்களிலும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். 

nehru

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் முத்துராஜா, "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை தெற்கு தொகுதியில் மசால் லே அவுட் பகுதியில் கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் உள்ளன. நீண்ட நாட்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட கால்வாய் ஆக்கிரமிப்பு ஒரு புறம், கழிவுநீர் கலந்து வரக்கூடிய நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை சுகாதாரமாக மாற்றித் தர வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "கோவை மாநகராட்சி மூலமாக இதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கால்வாய் ஓரத்தில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக வேறு இடம் மாற்றி கொடுத்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையென்றால் நீங்களே கூட நாளை அவர்களை காலி பண்ண கூடாது என போராட்டத்தில் ஈடுபடுவீர்கள். ஏற்கனவே ரோடு சரியில்லை என்று கூறியிருந்தார்கள். தற்போது 200 கோடியில் கோவையில் உள்ள அத்தனை சாலைகளும் மேம்படுத்தப்படும். எல்லா நகரங்களிலும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் மூலம் சுத்திகரித்து மீண்டும் தரும் பணியையும் முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.