அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை- கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் டிசைனுக்கான டெண்டர் கூட கொடுக்கப்படாத நிலையில், அண்ணாமலை செல்லும் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரையாக தான் அமையும் என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் போராட்டம்

"எங்கள் எய்ம்ஸ் எங்கே?" எனும் தலைப்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடத்தப்பட்ட தொடர்முழக்க போராட்டத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, திமுக எம்.எல்.ஏ தளபதி, மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் உள்ளிட்டோர் செங்கல்லை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். எய்ம்ஸ் மருத்துவமனை கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் செங்கலுடன் படுத்தவாறு வந்து பங்கேற்றார் தொண்டர் ஒருவர்.

கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டிசைன் தயாரிப்பதற்கான டெண்டரே இன்னும் அளிக்கப்படவில்லை.  இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறாராம். அது பாதயாத்திரை அல்ல, மோடி அரசுக்கான இறுதி யாத்திரை. பாத யாத்திரையின் போது மதுரை பக்கம் வந்தால் எய்ம்ஸ் எங்கே என மக்கள் கேட்டால் அண்ணாமலை என்ன சொல்வார்? கவர்னர் தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கிறார். பிரதமர் தமிழ்நாட்டையே அழிக்க நினைக்கிறார். தமிழ்நாட்டை யாராவது சீண்டிப்பார்த்தால், அவரை அடித்து அணிபணிய வைப்போம் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கவர்னர்” என்றார்.