வெட்கித் தலைகுனியும் ஜோக்கர் அரசு திமுக - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

 
jayakumar

திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நாற்காலி எடுத்துவராத தொண்டர் ஒருவரை பார்த்து அமைச்சர் நாசர்  கல் எறிந்ததை குறிப்பிட்டு அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்திற்காக, திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை அருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை நேற்று  திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் அமருவதற்காக, நாற்காலிகளை எடுத்து வருமாறு அங்கிருந்த தொண்டர்களிடம் கூறியிருக்கிறார்.  இதையடுத்து, நாற்காலிகள் எடுக்க சென்ற தொண்டர், ஒரே ஒரு நாற்காலியை அதுவும் மெதுவாகவும் எடுத்து வந்துள்ளார். இதனைப்பார்த்து கோபமடைந்த அமைச்சர், அவரை ஒருமையில் பேசியபடி, அங்கிருந்த மண் குவியலில் இருந்து  ஒரு கல்லை எடுத்து அந்த தொண்டர் மீது வீசி எறிந்தார். இந்த வீடியோ காட்சி முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

வெட்கித் தலைகுனியும் ஜோக்கர் அரசு திமுக -  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

அந்தவகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அமைச்சர் நாசரை விமர்சித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க தினத்தை முன்னிட்டு, இன்று  சென்னை  ராயுபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.  இந்த பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது. ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள், பொதுமக்களை அடிப்பவர்கள், உள்ளாட்சி பிரநிதிகளை அசிங்கப்படுத்துவர்கள் தான் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். கல் தூக்கி அடித்த அமைச்சரை இதுவரை பார்த்தது இல்லை. தமிழ்நாடு வெட்கித் தலை குனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது. திமுக கற்காலத்திற்கு சென்று விட்டது” என்று கூறினார்.