தமிழ்நாடு முழுவதும் பிப்.12-ந் தேதி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்-12ஆம் தேதி போராட்ட ஆயத்த மாநாடு, மார்ச் -5ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம், மார்ச்-24ல் 20ஆயிரம் கிலோமீட்டர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
புதிய பென்சன் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவைதொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் நிலையில் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து மதுரையிலுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து ஜாக்டோ ஜியோவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, பொன்.செல்வராஜ், மயில் ஆகியோர் மதுரையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்-12ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு, மார்ச் -5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம். மார்ச்-24 வட்டார, மாவட்ட தலைநகரங்களில் 20ஆயிரம் கிலோமீட்டர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்த 3கட்ட போராட்டத்திற்கு பின்னும் கோரிக்கையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றனர்.