நாளை தொடங்குகிறது ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வு..

 
jee

ஐஐடி, என்ஐடியில் பொறியியல்  படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ.மெயின் நுழைவுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது.

நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து  பொறியியல் படிப்பு படிக்க வேண்டுமென்றால், அவர்கள் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.  ஒவ்வொரு ஆண்டும் இந்தத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது.  அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு நாளை (24-ந்தேதி) தொடங்கி  31-ந்தேதி வரை இந்த தேர்வு நடத்தப்பட  இருக்கிறது.

நாளை தொடங்குகிறது ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வு..

இந்த தேர்வில் பங்கேற்க  9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 8 லட்சத்திலிருந்து  9 லட்சம் வரையில்கானோர் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளதாக கூறப்பாடுகிறது. ஜே.இ.இ தேர்வை எழுத மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், 2-ம் கட்ட ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும் 2-ம் கட்ட தேர்வை எழுத முடியும். ஜே.இ.இ. நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாட்களில் சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், செய்முறை தேர்வை எழுத  என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். சி.பி.எஸ்.இ.  பிளஸ் 2 தேர்ச்சிக்கு மொத்த மதிப்பெண்ணில்,  செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால் , அந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது மிக அவசியமாகும். எனவே ஜே.இ.இ. மெயின் தேர்வு நடைபெறும் நாட்களில் நடைபெறவுள்ள செய்முறை தேர்வுகளை  வேறு நாட்களுக்கு மாற்றும்படி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.