அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " நான் மரியாதையுடன் பார்க்க கூடிய தலைவர் எம்ஜிஆர். கட்சி எல்லைகள் எல்லாவற்றையும் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தியவர் எம்ஜிஆர். மாணவர்களுக்கு அவர் படிப்புடன் சத்துணவும் கொடுத்தார். அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர். எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர்" என்றார்
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக துண்டு துண்டாக பிரிந்துள்ளது குறித்து ஆளுநராக அரசியல் கருத்து கூற முடியாது . எம்ஜிஆர் நல்ல கனவோடு கட்சியை நடத்தி வந்தார். அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து" என்றார்.