யோகா பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ மரணம்.. கண்டன அறிக்கை வெளியிட்ட ஈஷா மையம்..

 
யோகா பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ மரணம்.. கண்டன அறிக்கை வெளியிட்ட  ஈஷா மையம்..

யோகா பயிற்சிக்கு வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில்,  சுயலாபத்துக்காக அரசியலாக்க முயற்சிப்பதாக ஈஷா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்கிற பெண், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக வந்திருந்தார்.  அவர் திடீரென மாயமானதால், அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணையை முடுக்கிய காவல்துறை, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. அதில் திடீரென ஈஷா மையத்தில் இருந்து வாடகை கார் மூலம் வெளியேறிய அவர், பின்னர் வெறொரு பகுதியில் யோகா சீருடையில் வெறும் காலில் பதற்றத்துடன்  நடந்து சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு  அவர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

ஈஷா யோகா

இது தொடர்பாக சில அமைப்புகள் ஈஷா யோகா மையத்தை குற்றம் சாட்டின. சுபஸ்ரீ-யின் உறவினர்களும் ஈஷா மையத்தையும், ஜக்கியையும் குற்றம் சாட்டினர்.  இந்த நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து ஈஷா யோகா மையம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சுபஸ்ரீயின் மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத இந்த துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் வெளியிட கூடாது என்பதற்காகவே இத்தனை நாட்கள் அமைதி காத்தோம் நாங்கள் சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் போலீசாருக்கு முறையாக வழங்கி உள்ளோம்.

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு.. 

மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள் இதனை தங்கள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக சிலர் வதந்திகள் மற்றும் அவதூறுகளை வெளியிட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் களைத்து விடமுடியாது. ” என்று தெரிவித்துள்ளது.