ஒரு கனல் கண்ணனுக்கே இப்படியா? ஆயிரம் கனல் கண்ணன் பேசினா என்ன செய்வீங்க?
ஒரு கனல் கண்ணனுக்கே இப்படியா? ஆயிரம் கனல் கண்ணன் பேசினா என்ன செய்யும் அரசு?என்று கேட்கும் எச்.ராஜா, தேசிய சக்திகளுக்கு எதிராக செயல்படும் உங்கள் மிரட்டல் போக்கை தவிர்த்து விடுங்கள். உங்கள் வேலைகளை பார்த்தால் நல்லது என்று டிஜிபி சைலேந்திரபாபு, டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை எச்சரித்தார் .
இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் என்ற தலைப்பில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நடந்து வந்தது. கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் இந்த பிரச்சார பயணம் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு சென்னை மதுரை வாயலில் பிரச்சாரப் பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவர் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பங்கேற்று பேசினார் . அப்போது அவர், ’’சீரங்கநாதனை கும்பிடுவதற்காக ஸ்ரீரங்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கோயிலுக்கு போய் வருகிறார்கள். ஆனால் அந்த கோவிலுக்கு எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் நம் இந்துக்களின் எழுச்சி நாள்’’என்று சொன்னார். இதற்கு திகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது, கலகம் செய்யத் தூண்டுதல் , அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல். இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் பரவுகிறது. கனல் கண்ணனை கைது செய்வதற்காக சென்னை மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்பட மூன்று இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என்று தகவல் பரவுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் எழுப்பிய கேள்விக்கு, ‘’ஆண்டவர் நடராஜனை பற்றி இழிவாக பேசியவரை கைது செய்ய துப்பில்லாத, திராணியில்லாத தமிழக காவல்துறை கனல் கண்ணன் வீட்டிற்கு சென்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது’’ என்றார்.
அவர் மேலும் அது குறித்து, ’’இந்து முன்னணியின் உரிமை மீட்பு மாநாட்டில் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கருத்து தெரிவித்ததால் உடனடியாக அவர் வீட்டிற்கு போலீஸ் சென்று மிரட்டுகிறது. ஆனால் நடராஜரை இழிவுபடுத்தி பேசியவர் வீட்டிற்கு பாதை தெரியவில்லையா இந்த காவல்துறையினருக்கு? ஆண்டவரை இழிவுபடுத்தி பேசலாம் நேற்று பிறந்த மனிதரை இழிவுபடுத்தி பேசக்கூடாதா?’’ என்று ஆவேசமானார் எஸ். ராஜா.
’’ நான் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன். போலி பாஸ்போர்ட் புகழ் டேவிட் ஆசீர்வாதம் கமிஷனர் ஆக இருந்த பொழுது அதிகமாக போலி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது. இது தமிழக காவல்துறையின் பாரம்பரியம் தேச விரோதமாக நாட்டின் இறையாண்மைக்கு நாட்டு நன்மைக்கு எதிராக செயல்படக்கூடிய அதிகாரிகள் தமிழகத்தை இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை கனல் கண்ணன் வீட்டிற்கு காவல் துறையினர் சென்று மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவருக்கு கருத்து உரிமை கிடையாதா? அவர் கருத்துரிமையை தடுப்பதற்கு டிஜிபி சைலேந்திரபாபு யார்? டேவிட்சன் தேவா சீர்வாதம் யார்? தேசிய சக்திகளுக்கு எதிராக உங்கள் மிரட்டல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். ஒரு கனல் கண்ணனுக்கே இப்படி என்றால் ஆயிரம் கனல் கண்ணன் கருத்து சொன்னால் தமிழக அரசு என்ன செய்யும்? டிஜிபி சைலேந்திரபாபு , டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்... இவர்கள் யார் ஆசிர்வாதத்தில் செயல்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. தேசிய சக்திகளுக்கு எதிராக செயல்படும் உங்கள் மிரட்டல் போக்கை தவிர்த்து விடுங்கள். உங்கள் வேலைகளை பார்த்தால் நல்லது’’ என்று எச்சரித்தார் .