ஈசாவுக்கு ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டமா? குஷ்பு ஆவேசம்
ஈஷாவுக்கு ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டமா? சுபஸ்ரீ மரணத்தில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகிறார் என்று ஆவேசப்பட்டுள்ளார் குஷ்பு.
நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ , கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகிறார்.
ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்திருக்கிறார். இந்த மரணத்தை முறையாக விசாரணை நடத்த வேண்டும் . சட்டம் அனைவருக்கும் சமமானது தான். ஈசாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டமா? அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. சட்டம் அனைவருக்கும் சமமானது தான் . இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆளுநர் விவகாரம் குறித்து கேள்விக்கு, சட்டமன்றத்தில் ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி, ’போய்யா’ என்று இழிவாக பேசியிருக்கிறார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா? என்று ஆத்திரப்பட்டார்.
இளைஞர்கள் அதிகம் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்த கேள்விக்கு, மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.