தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்காலத் தடை

 
madurai high court

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கம்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்க தலைவர் சோமசங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த இரு தேர்வுகளும் தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. இளநிலை தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு, தாள் - 2 ஸ்டேட்மென்ட், லெட்டர் டைப்பிங் ஆக இருக்கும். அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக இந்த முறையில்தான் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போதைய தேர்வு அறிவிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள்-2 ஸ்பீடு என கூறப்பட்டுள்ளது. இந்த முறையை ரத்து செய்து 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் முறைப்படியே இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமினாதன், ஏற்கெனவே நடைமுறையில் இருந்து முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து பிரவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும்,  இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தவும்  உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்தது.