வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
தேனியில் பெய்யும் தொடர் கன மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழக மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இதுகுறித்து வைகை அணை உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேனி மாவட்டத்தில் 30.08.2022 அன்று பெய்த கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் 31.08.2022 அன்று முற்பகல் 11.30 மணிக்கு வைகை அணையின் நீர் மட்டம் 70.00 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக வைகை அணையிலிருந்து 4006 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோரமாக உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.