தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்
தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும் என்கிறார் அர்ஜுன் சம்பத்.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் , தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும் . இந்தியாவில் காசி, இராமேஸ்வரம் இரண்டும் தான் முக்கியம் . அதனால் இந்த முறை தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் . மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவையில் போட்டியிட வேண்டும் என்றார்.
பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்கின்ற கட்சி தான் தமிழகத்தில் வெற்றி பெறும். அதனால் அதிமுக பிஜேபி கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பதை போல மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்கிறது. இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் பதில் கொடுப்பார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.
அவர் மேலும், திராவிட இயக்கங்களின் ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி. திராவிட இயக்கங்களின் முதல்வராகளிலேயே எம்ஜிஆரை விட ஜெயலலிதாவை விட கருணாநிதியை விட அண்ணாவை விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றார்.