புத்திசாலியாக இருந்தால் பிராமணர்! ஜாதி என்பது ரத்தம் அடிப்படையிலானது! சு.சாமி பேச்சு

 
su

நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர்.  ஏன் தெரியுமா ? என்ற கேள்வியை எழுப்பி,  அதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி.  

 பிராந்திய கல்வி நிறுவனத்தின் அறுபதாவது தின விழாவில் சுப்ரமணியம் சாமி பங்கேற்று பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் அது குறித்து பேசிய போது,   இந்து அமைப்பில் நான்கு வர்ணங்கள் உள்ளன.  அவை ரத்தத்தின் அடிப்படையிலானது அல்ல.  குணத்தின் அடிப்படையில் ஆனது.   ஆனால் ஜாதி என்பது ரத்தம் அடிப்படையிலானது.  

ne

பகவத் கீதையில் கடவுள் கிருஷ்ணர் சொல்கிறார்.. ஒருவர் புத்திசாலியாகவும், பெருந்தன்மையாகவும், தைரியமாகவும் இருந்தால் அவர் பிராமணர் என்று கூறுகிறார்.   அப்படி என்றால் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் அல்ல பிராமணர் என நம்புகிறேன்.   அவர் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பல டிகிரிகள் முனைவர் பற்றங்களை பெற்றதுடன் நமது அரசியல் அமைப்புக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்  என்று சொன்னவர், 

நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர்.   ஏனென்றால் நேரு எந்த தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை . அவரது குடும்பத்தினர் கூட பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்

அவர் மேலும்,   தற்போது பாட புத்தகங்களில் ஆங்கிலேயர்கள் அல்லது இந்திய ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர்.  இந்தியா துண்டு துண்டாக இருப்பதாகவும் அதை ஒன்றாக இணைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்றும்,  மேற்கு ஐரோப்பாவில் இருந்து ஆரியர்கள் வந்த போது திராவிடர்கள் இங்கு குடியிருந்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார்கள் .  இவை அனைத்தும் தவறான கருத்துக்கள்.  அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே டி.என்.ஏ இருக்கிறது.  அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.   இதனை பல்கலைக்கழகங்களில் மேம்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.   இதையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.