காலரை கூட தூக்கி விட்டுக் கொள்கிறேன் - சத்யராஜ்
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே படிக்காமல் சில பகுதிகளை தவிர்த்து தான் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து ஆளுநர் படித்ததால் அப்போதே முதல்வர் அதற்கு எதிராக தீர்மானம் போட்டதால் ஆத்திரமடைந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். வெளியே போ என்று திமுக எம்எல்ஏக்கள் அப்போது முழக்கம் எழுப்பினர். அதன் பின்னர் கெட் அவுட் ரவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றர் திமுகவினர். கெட் அவுட் ரவி என்று போஸ்டர் ஒட்டியும் வருகின்றனர்.
சட்டப்பேரவையில் அன்று நடந்த அந்த சம்பவம் குறித்து, இது சட்டமன்றத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயல் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘’தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலை அல்ல. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன’’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
நடிகர் சத்யராஜ் இதுகுறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ’’மனிதனுக்கு அழகு சிரிப்பு. சிரிப்பை விட அழகானது புன்னகை . சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்ப கவர்ந்தது. அது சட்டசபையில் நமது தமிழக முதல்வர் மானமிகு மு. க. ஸ்டாலின் அவர்களுடைய புன்னகை. அந்த புன்னகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சுயமரியாதை சுடர் விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கலந்திருந்தது . தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலரை கூட தூக்கி விட்டுக் கொள்கிறேன். ’’என்று தெரிவித்துள்ளார்.