சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள்.. வெளியே நடமாடவிட்டால் சாட்சிகளை கலைப்பார்...
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்த சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை தொடர்பான வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் ஹேம்நாத்தின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது நண்பர் ரோகித் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், ’’ஹேம்நாத் என் நீண்ட கால நண்பர். அவர் மூலம் சித்ராவை எனக்கு நன்றாக தெரியும். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்து இருக்கிறேன்.
ஹேம்நாத்தின் பல நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் நான் மட்டும் சாட்சியம் அளித்தேன். இதற்காக ஹேம்நாத் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். ஹேம்நாத் தால் என்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஹேம்நாத் தன்னுடைய பணம் , அதிகாரிகளின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருகிறார். அவரை மேலும் வெளியே சுதந்திரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார். ஆகவே, உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தந்தை, காவல்துறை ஆகியோர் இந்த மனு மீது பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வழக்கின் மறு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.