இலங்கை சிறையில் இருந்து தப்பிய கைதிகள் - ராமநாதபுரத்தில் பலத்த பாதுகாப்பு

 
rameswaram

இலங்கை சிறையில் இருந்து 50க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியதின் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் தீவுப்பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏராளமான மக்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர். மேலும் இலங்கையில் நடைபெற்ற வன்முறையைப் பயன்படுத்தி அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை குற்றவாளிகள் மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் சுமார் 50 பேர் சினையில் இருந்து தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டது. இலங்கையில் இருந்து வரும் பயங்கரவாதிகள், அகதிகள் போல் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

rameswaram

ராமநாதபுரம்  மாவட்ட இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற் பகுதிகளிலும் அதே போல் தீவு பகுதி முழுவதும் தமிழக கடலோர பாதுகாப்பு படையின் ராமநாதபுரம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தமிழக கடலோர பாதுகாப்பு படை காவலர்கள் ரோந்து படகுகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதேபோல் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியோருக்கு சொந்தமான ரோந்து படகுகள், ஆள் இல்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடல் பரப்பு, மணல் திட்டுகளில் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் உள்ள முயல் தீவு, குருசடைத் தீவு போன்ற தீவுப் பகுதிகளில் தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த தீவு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.