அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் அதி கனமழை
தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக இன்று கனமழையும் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மழை அதிகம் பெய்து வருவதால், சென்னையிலும் மழை தொடர்ந்து அதிகம் பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதை அடுத்து மாநில பேரிடர் மீட்பு படையின் நான்கு குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளார்கள்.
வங்க கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடலோரப் பகுதியில் நிலவுகின்றது. இதனால் தமிழகத்தில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.