சென்னையில் கனமழை எதிரொலி : தாமதமாக புறப்பட்ட விமானங்கள்..
![சென்னையில் கனமழை எதிரொலி : தாமதமாக புறப்பட்ட விமானங்கள்..](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/77bf19a475cfefc87fb066255b175def.jpeg)
கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய விமானங்கள் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள கற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக உருவெடுத்துள்ளதாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துல்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. பகல்நேரத்தில் கூட கும்மிருட்டுடன் மழை பெய்து வருவதால் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக விமானிகள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து கத்தார், துபாய், பாங்காக், இலங்கை, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய விமானங்களும், மதுரை, திருச்சி, மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, அந்தமான் போன்ற உள்நாட்டு விமானங்களும் சுமார் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் குறித்த நேரத்தில் தரையிறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.