அதிமுக அலுவலகத்திற்கு செல்ல ஓ.பி.எஸ். தரப்பினர் திட்டம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

 
admk office

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு வருவதை தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்ததை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில்  ஓபிஎஸ், தனது  ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். இதனால் அங்கு  ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதனையடுத்து  வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர்.  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருதரப்பும் நீதிமன்றத்தை நாடின. பின்னர் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றுமாறும், அதன் சாவியை பழனிசாமியிடம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  

admk

இந்த விவகாரங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்லாமல் இருந்தனர்.  இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் அதிமுக அலுவலகத்திற்கு சென்றார்.  இந்த நிலையில் பன்னீர் செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக  அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்திருக்கிறார்.    ஓ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் மீண்டும் செல்ல முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை புகார் அளித்தார். 

ep

இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. அலுவலகம் முன்பு உள்ள அவ்வை சண்முகம் சாலையில் தீவர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நீங்கி இயல்பு நிலை திரும்பும் வரை அ.தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.