செப்டம்பர் மாதத்தில் வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 
ma subramanian

செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விலையிலா மிதிவண்டிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று பாதிப்பு உள்ளது.  இருப்பினும் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

Ma Subramanian

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.