டிப்ளமோ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பி.இ., பி.டெக் 2ம் ஆண்டு சேர கால அவகாசம் நீட்டிப்பு..
டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அதேபோல் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் தான் வெளியாகின. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னதாகவே, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், அந்த மாணவர்களும், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை CBSE மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பி.இ.,மற்றும் கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிப்ளமோ முடித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதனால் டிப்ளமோ மாணவர்களின் நலன் கருது , அவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வந்தது. அதனைஏற்று தற்போது டிப்ளமோ மாணவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.