"சிறுவனை கொலைகாரனாக்கியிருக்கிறது மதுபோதை" - அன்புமணி வேதனை பதிவு!!

 
pmk

தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த  அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

anbumani

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் செல்வராணி .இவரது கணவர் பிரபுதாஸ்.  செல்வராணி தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவரது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.  இவர்களுக்கு வின்சென்ட் என்ற மூன்றாம் ஆண்டு கல்லூரி படிக்கும் மகனும் , பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஷெர்லி ஜான் என்ற மகனும் உள்ளனர்.  ஷெர்லி ஜான் மது போதைக்கு அடிமையாகி உள்ளார்.  

இந்த சூழலில் குடிபோதையில் ஷெர்லி தாயார் செல்வராணியை தாக்கியுள்ளார் . இதை மூத்த மகனான வின்சென்ட் தட்டி கேட்டதாக தெரிகிறது.  இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மது போதையில் இருந்த ஷெர்லி ஜான்,  ஆத்திரத்தில் கத்தியால் தனது அண்ணனை குத்தியுள்ளார் . இதில் வின்சென்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் ஷெர்லி ஜானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

murder

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்திருக்கிறான்.  மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது! கொலை செய்த தம்பிக்கு 17 வயது தான். அவரது தாய், தந்தையர் இருவரும் ஆசிரியர்கள். 12-ஆம் வகுப்பு பயிலும் அவர் நன்றாக படிக்கக் கூடியவர் தான். ஆனால், இத்தனை நல்ல விஷயங்களையும் சிதைத்து அந்த சிறுவனை  கொலைகாரனாக்கியிருக்கிறது மதுபோதை. அப்படியானால் அது எவ்வளவு கொடியது? மனிதன் இயல்பான நிலையில் தாயை தாக்க முனைய மாட்டான்; அண்ணனை கொலை செய்ய முயலமாட்டான்.



ஆனால், பதின்வயதை தாண்டாத சிறுவன் இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியிருப்பதற்கு காரணம் அவனை இயக்கிய மது அரக்கன் தான். அந்த சிறுவன் கஞ்சாவுக்கும் அடிமை எனக் கூறப்படுகிறது! இது போன்ற கொடிய நிகழ்வுகள் வாரம் ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கான தீர்வு என்ன? என்பது அரசுக்கும் தெரியும். எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த  அரசு முன்வர வேண்டும்!" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.