பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் -அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை

 
priya football

பிரியா மரண வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு மருத்துவர்களையும் கைது செய்தால் போராட்டம் நடத்துவோம் என தமிழக அரசுக்கு, அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே  பிரியா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த  மருத்துவர்கள் பால்ராம் சங்கர்,  சோமசுந்தரம் தவிர மயக்க மருந்து செலுத்திய மருத்துவர்,  செவிலியர்கள்,  பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே   கவனக்குறைவாக செயல்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்திருக்கிறது. மருத்துவக் கல்வி இயக்குனரக அறிக்கையை  அடிப்படையாக வைத்து இயற்கைக்கு மாறான மரணம் என போடப்பட்டிருந்த வழக்கு, மாற்றப்பட்டு  அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்னும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.  மேலும், மருத்துவ கல்வி இயக்குனராக அறிக்கையை சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி வைத்து,  இந்த வழக்கில் கூடுதலாக சில பிரிவுகளின் கீழ் சேர்க்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.

priya

 வழக்கு பதிவு மாற்றப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்திருக்கிறது.   முதல் கட்டமாக மருத்துவர்கள் இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனிடையே மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராமசங்கர் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.  பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு வழக்கு மாற்றப்பட வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மீறி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வீராங்கனை பிரியா மரணம் துரதிஷ்டவசமானது எனவும் அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.