நகைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. தங்கம் விலை அதிரடியாக சரிவு..
கடந்த சில நாட்களாகவே சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை கண்டுள்ளது.
தங்க ஆபரணங்கள் எப்போதுமே பெண்களுக்கு பிடித்தமான ஒன்றுதான், அதிலும் தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மற்றும் தங்கம் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தங்கம் மூதலீட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் அதன் விலை எப்போதுமே சற்று தடுமாற வைக்கும். கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்திய பிறகு தங்கத்தின் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் ( செப்) இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. பின்னர் மீண்டும் தங்கம் விலை இறங்குமுகம் காட்டியது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதாவது கடந்த சனிக்கிழமை சவரன் ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கு விற்கப்பட்டது. இந்த வாரமும் சரிவுடனேயே தொடங்கிய தங்கம் விலை, குறிப்பாக நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைந்து ரூ.37,440-க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைப்பால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இன்றைய தினம் மேலும் மகிழ்விக்கும் விதமாக தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்திருக்கிறது.
அதாவது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,008-க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.54 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,626-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சரிந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து, ரூ.61.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 61 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.