கோகுல்ராஜ் கொலை வழக்கு- சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு

 
gokul swathi

ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கடைசியாக இருந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ஆம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Madras High Court in Chennai - Chennai Madras High Court, Places to Visit  in Chennai

சேலம் மாவட்டம் ஓமலுரைச்சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடியாக அழைத்து  வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.  அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால்,  விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சுவாதியின் கணவர் ஆஜரான நிலையில், சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியது உறுதியாவதாக கூறிய நீதிபதிகள், சுவாதி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

கோகுல்ராஜின் தாயார், அரசு, சிபிசிஐடி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதி தள்ளிவைத்தனர். இதனிடையே, கோகுல்ராஜ் இருந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள்வதற்காக ஜனவரி 22ல் நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.