தங்கம் வாங்க உடனே கிளம்புங்க.. சவரனுக்கு ரூ.440 சரிவு..
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 சரிந்திருப்பது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்திய பிறகு தங்கத்தின் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. எனினும், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நகை விலை சற்று சரிவை சந்தித்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அடுத்த சில நாட்களே மீண்டும் இருமடங்காக விலையேற்றம் கண்டது. அதன்படி கடந்த மாதம் 25ம் தேதி சவரன் ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு சற்று சரிவை சந்தித்து இந்த மாத தொடக்கத்தில் நகை விலை குறைந்து விற்பனையானது. செப்டம்பர் 2 ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 4,695க்கும், ஒரு சவரன் ரூ. 37,560க்கு விற்பனையானது.
அதன்பிறகு மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கனிசமாக விலையேற்றம் இருந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38,000 ரூபாயாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் சரிந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 4,695 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ. 440 குறைந்து 37, 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 59 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 1 ரூபாய் குறைந்திருக்கிறது. அதன்படி இன்று ஒரு கிராம் வெள்ளி 58 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ58,000 ஆகவும் விற்கப்படுகிறது.