தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 
gk vasan

தமிழகம் முழுவதும் இன்ப்ளுயன்சா காய்ச்சல் பரவி வருவதால் தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் தற்பொழுது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது எச்1என்1, இன்ப்ளுயன்சா காய்ச்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள காய்ச்சலில் இருந்து நாம் விடுபட கட்டாயம் முகவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை கடை பிடிக்க வேண்டும். இதற்கு அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உரிய விளம்பரங்கள் மூலம் மக்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் எச்1என்1 இன்ப்ளுயன்சா காய்ச்சல் குழந்தைகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலங்கள் வரை விடுமுறை அளிக்க வேண்டும்.

அவர்களுக்கு கற்றல் தடைப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். 10, 11, 12 ஆகிய வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இருப்பதால் அவர்களுக்கு உரிய வழி காட்டுதலின் படியும், பாதுகாப்புடனும் வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும். காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக உரிய மருத்துவ உதவிகளை செய்து அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.