இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் - ஜி.கே.வாசன் பேட்டி

 
gk vasan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதால ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  

இந்நிலையில், புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இடைத்தேர்தலை பொறுத்தவரையில் திமுக மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது. பெரிய கட்சி என்பதால், அதிமுக போட்டியிடுவது தான் சரியாக இருக்கும். எனவே இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் வெற்றிபெறுவதற்கான வியூகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த வியூகம் வெற்றி வியூகமாக அமையும். இன்றைய அரசியல் சூழல், தமிழ் மாநில காங்கிரசின் எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.