பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு! செவிலியர்கள் பார்த்த பிரசவத்தால் விபரீதம்

 
க்

ஓசூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பார்த்த பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டது.

ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (23). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார் இவரது மனைவி வசந்தா (21), இவர்களுக்கு மோனிஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. கர்ப்பமாக இருந்த வசந்தாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 20- ஆம் தேதி உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை வசந்தாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் வராததால் அங்குள்ள செவிலியர்களே வசந்தாவுக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. 

குழந்தை பிறந்த போது குழந்தைக்கு வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எலும்பு முறிவு குறித்து  குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்காமல் உடனடியாக குழந்தையையும் தாயையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களுக்கு குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து தெரியவந்துள்ளது. தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.