எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் - செங்கோட்டையன் நம்பிக்கை

 
Sengottaiyan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 

ops eps

இந்நிலையில், எங்கள் தரப்பிற்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். தி.மு.க. தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணிகுழு அமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார். இவ்வாறு கூறினார்.