தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் - செல்லூர் ராஜூ

 
sellur raju

தமிழக மக்களை கசக்கி பிழிந்து வரும் திமுகவால் இனிமேல் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவே முடியாது எனவும், அப்படி திமுக ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெருவில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: மின் கட்டண உயர்வால் தி.மு.க. அரசு தமிழக மக்களை கசக்கி பிழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.க. அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று இரண்டை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள். முழு பூசணிக்காயை குண்டு சட்டிக்குள் மறைக்க பார்க்கின்றனர்.பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் என கூறுகின்றனர். தி.மு.க. எதுவும் செய்யவில்லை என மக்கள் சொல்கிறார்கள். வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். தி.மு.க. அரசு எதையுமே செய்யாமல் வாக்களித்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர்.

 sellur raju

வாக்களித்த மக்கள் இந்த ஆட்சி பிடிக்கவில்லை வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என சட்டம் இருந்தால் திமுக அரசு மாற்றப்பட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.  அரசு கொண்டு வரவேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என மக்கள் ஏங்கிக் கொண்டுள்ளனர்.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு துன்பம் துயரம் நிறைந்துள்ளது, தி.மு.க. ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை நடக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும், ஆனால் துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் தி.மு.க. தலைமையிலான அரசு செயல்படுகிறது.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது, மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தொழிலதிபர்கள் சந்தோஷமாக இல்லை, மின் வெட்டு இருக்கும் போது மின் கட்டண உயர்வு வேறா, ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசை குறைசொல்லி எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது திமுக அடிமை அரசாக உள்ளனர். கேட்டால் திராவிட மாடல் அரசு எனச் சொல்லுவது கேலிக்கூத்தாக உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி உயர்வுக்கு அட்டையை பிடித்து நின்ற ஸ்டாலினின் தற்போதைய ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்றால் மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது, ஒரு சீட் இரண்டு சீட் திமுக தற்போது கூட்டணி பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.எங்கள் கட்சியில் உள்ள பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு பொதுச் செயலாளர் ஆக்கி உள்ளோம், தற்போதோ அல்லது நாளைக்கோ தேர்தல் வைக்கச்சொல்லுங்கள். அப்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம் என கூறினார்.