ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

 
os manian

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது எனவும், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகிய 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ்.மணியன் கூறியதாவது: திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கவில்லை. தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு என்பதை விட இல்லை என்ற நிலையே இருக்கிறது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீடிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. போதை பொருளின் சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி எளிதாக போதை பொருள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.கூட்டு பாலியல் வன்கொடுமை மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறையை பார்த்து அச்சப்படுகிற நிலை தமிழகத்தில் இல்லையோ என அஞ்சுகிற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.