10 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
10 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேது தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி., வில்சன் , தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நவ.12( நாளை) அனைதுக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வழக்கு நிலுவையில் இருந்தபோது ஆலோசிக்காமல், தீர்ப்புக்கு பின் கட்சிகளை அழைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பு உள்ளார்.