சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி
சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலிலுக்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி முன்னிட்டு நாளை முதல் 7ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரோடையில் குளிப்பதற்கும், இரவில் கோயிலில் தங்குவதற்கும் அனுமதி இல்லை என வனத்துறை கூறியுள்ளது.