நடுக்கடலில் தவித்த மீனவர்கள் : இலங்கை கடற்படைக்கு குவியும் பாராட்டு..

 
நடுக்கடலில் தவித்த மீனவர்கள் :   இலங்கை கடற்படைக்கு குவியும் பாராட்டு..

நடுக்கடலில் பழுதாகி நின்ற படகில் தவித்த  ராமேஸ்வரம் மீனவர்களை காப்பாற்றிய, இலங்கை கடற்படையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து  நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  அதில், ராஜா என்பவருக்குச் சொந்தமான  விசைப்படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, பாண்டி உள்ளிட்ட 6 பேர்  சென்றுள்ளனர்.  நள்ளிரவு சுமார் 11 மணியளவில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,  திடீரென படகில் உள்ள எஞ்சினில்  பழுது ஏற்பட்டுள்ளது.   இதனால் படகில் கடல் நீர் புக ஆரம்பித்ததையடுத்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கத் தொடங்கியிருக்கிறது. இதனை அப்பகுதியில்  ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், கவனித்துள்ளனர்.  

இலங்கை கடற்படை

உடனடியாக  இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.  அத்துடன்  படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரிசெய்ய முயன்றுள்ளனர்.  ஆனால்,  முடியவில்லை.   பின்னர்  மன்னார் கடற்படை முகாமில் இருந்து மெக்கானிக்கை வரவழைத்து படகை சரி செய்ய முயன்று அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.  பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு உரிமையாளர் ராஜாவின் செல்போன் எண்ணை வாங்கி , இலங்கை கடற்படை வீரர் ஒருவர் வாட்ஸ்அப் மூலமாக, படகு பழுதாகி நிற்பதையும், மீனவர்கள் தங்களது பாதுகாப்பில்  இருப்பதையும் தெரிவித்துள்ளனர்.   உடனடியாக வந்து படகை மீட்டுச் செல்லுங்கள் என்றும்  வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.  

இலங்கை கடற்படை

இதனையடுத்து  விசைப்பட உரிமையாளர் ராஜா,  அவர்களை மீட்டு வட  ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் வேறொரு  விசைப்படகு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.  தொடர்ந்து இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை  சர்வதேச கடல் எல்லை  வரை இழுத்து வந்து  ராஜா அனுப்பி வைத்த புதிய படகில்  வந்த மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.   மேலும் தமிழக மீனவர்கள் 6 பேரையும் அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.  அத்துடன் பழுதான படகில் இருந்த 6 மீனவர்களுக்கும்  இலங்கை கடற்படையினர் பழம், பிஸ்கட், உணவு உள்ளிட்டவற்றை அளித்து அவர்களுக்கு முழு உதவி செய்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இது   ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இலங்கை கடற்படையினர்  கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்கிற அச்சம் நிலவும் சூழலில் , இந்த சம்பவம் மீனவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.