நேற்று அபராதம்.. இன்று நோட்டீஸ்.. நடிகர் விஜய்க்கு அடுத்தடுத்து நெருக்கடி..
நடிகர் விஜய் நடித்த “வாரிசு” படத்தின் படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்த மாநிலங்களில் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. அதேநேரம் விஜய்க்கு ஆதரவாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் எந்தவித சிக்கலும் இல்லை என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளார் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி உறுதியளித்துள்ளார்..
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பின்போது அனுமதியின்றி 5 யானைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம், வாரிசு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழும், விலங்குகள் நலச் சட்டத்தின் கீழும் யானைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள விலங்குகள் நல வாரியம், சினிமாவில் யானைகளை பயன்படுத்துவதற்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் உரிய முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பின் போது யானைகளை பயன்படுத்தியது தொடர்பாக , 7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வாரிசு படத்தை தயாரித்து வரும் வெங்கடேஸ்வரா கிரியேஷன்சுக்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.