மேயர் கூட்டத்தில் -சீரியஸான நேரத்தில் வீடியோ கேம் விளையாடிய பெண் கவுன்சிலர்
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் கலந்தாலோசனையின் போது வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கி இருந்த பெண் கவுன்சிலர் வீடியோ வைரலாகி கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
மேயர் பிரியா தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 200 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அதில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தரப்பு வெளிநடப்பு செய்ய, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களின் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதன் பின்னர், சாலைகளை சீர் செய்யவில்லை. மழை நீர் கால்வாய் பணிகள் முறையாக நடக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் சொல்லாமல் அதிகாரிகள் அபராதம் போடுகிறார்கள். கவுன்சிலர்கள் சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்று எழுதிக் கொடுத்தால் அதிகாரிகள் நிராகரிக்கிறார்கள் என இப்படி பல்வேறு பிரச்சினைகளை மன்றத்தில் பார்வைக்கு வைத்து பல கவுன்சிலர்கள் பரபரப்பாக வாதிட்டுக் கொண்டிருக்க, இதில் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் மடிப்பாக்கம் 188 வது வார்டு கவுன்சிலர் சமீனா செல்வம் தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்.
இது கேமரா காட்சிகளில் சிக்கி அது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் மன்ற கூட்டங்களில் சக கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை எப்படி பேசுகிறார்கள். முக்கியமான தீர்மானங்கள் மீது எப்படி விவாதிக்கிறார்கள் என்பதை கவனித்து தனது பகுதி பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் காதுகளுக்கு கவுன்சிலர்கள் கொண்டு செல்ல வேண்டும். அதில் முழு கவனம் செலுத்துவதை விட்டு சீரியஸான நேரத்தில் இப்படி வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கலாமா? கொஞ்சம் கூட பொறுப்பில்லாத கவுன்சிலராக இருக்கிறாரே? என்று அந்த பெண் கவுன்சிலருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.