ராமஜெயம் வழக்கில் நாளை உண்மை கண்டறியும் சோதனை
அமைச்சர் கே. என். நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் நாளை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
திருச்சியை சேர்ந்தவர் ராமஜெயம். இவர் திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே. என். நேருவின் சகோதரர். கடந்த 2012 ஆம் ஆண்டில் காலையில் நடை பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர காவல் துறை தொடங்கி சிபிஐ வரை பல்வேறு கட்ட விசாரணை குழுக்கள் விசாரணை நடத்தியும் இதுவரை கொலையாளிகள் யார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட அனுமதி கேட்டு திருச்சி ஜே. எம்.- 6 நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு செய்யப்பட்டது. இதை அடுத்து இந்த 13 பேரில் 12 பேருக்கு சோதனை நடத்திட அனுமதி கிடைத்தது.
அந்த 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கிடைத்திருக்கும் நிலையில் நாளை முதல் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது. நாளை தொடங்கி 21ஆம் தேதி வரை சென்னையில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் நடத்தப்பட இருக்கிறது. தினேஷ் ,கலைவாணன், மாரிமுத்து , செந்தில், ரவி, திலீப் ,சிவா, ராஜ்குமார், சத்யராஜ் ,சுரேந்தர் , மோகன்ராம், கணேசன் உள்பட 12 பேருக்கு இந்த சோதனை நடத்தப்பட இருக்கிறது. இதுவரை மர்மமாக இருந்து வரும் கொலை வழக்கில் இவர்களிடம் நடத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனைக்கு பின்னர் உண்மைகள்தெரியவரும் என்று குடும்பத்தினர் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.