சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவை நீட்டிப்பு
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. முதற்கட்டமாக விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் என இரண்டு வழிதடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மெட்ரோவின் இரண்டாம் கட்டமாக 76 கிலோமீட்டர் மேம்பாலங்களாகவும்,42 கிலோமீட்டர் சுரங்கபாதையிலும் மொத்தம் 118 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைய உள்ளது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்கார்ட்,மாதவரம் முதல் சோழிங்கநல்லூர், பூந்தமல்லி முதல் மெரினா கடற்கரை* வரை என கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசிடம் ஒப்படைத்தது மெட்ரோ நிறுவனம். ஆனால் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில் பல நெடுஞ்சாலைத்துறைகளின் கீழுள்ள மேம்பாலங்கள் பணியின் காரணமாக அவர்களுடன் கலந்து ஆலோசித்து தற்போது மீண்டும் இத்திட்டத்தை செயல்பட தொடங்கி இருக்கிறது. சென்னை விமான நிலையம், பல்லாவரம்,கோதண்டம் நகர், குரோம்பேட்டை, திருவிக நகர்,மெப்ஸ்,தாம்பரம், இரும்புலியூர்,பெருங்களத்தூர், ஆர்.எம்.கே நகர்,வண்டலூர், வண்டலூர் விலங்கியல் பூங்கா,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என 12 மெட்ரோ நிலையங்களோடு 15.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்பட உள்ளது.
இதன் மொத்த விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அரசாணை பிறப்பித்த உடனே இதற்கான டெண்டர் விடப்பட்டு சில மாதம்களிலே பணிகளை மெட்ரோ நிர்வாகம் தொடங்க உள்ளது.