ஈரோடு இடைத்தேர்தல் ஆலோசனை: ஓபிஎஸ் அணிக்கு அழைப்பில்லை

 
ops

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  

இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதால ஜி.கே.வாசன் அறிவித்தார். இதையடுத்து அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  


இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடைத்தேர்தல் விதிகளை பின்பற்றுவது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சி தலைவர் நடத்திய அனைத்து கட்சி ஆலோசனையில் ஓபிஎஸ் அணிக்கு அழைப்பில்லை. ஈபிஎஸ் அணியினர் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், ஓபிஎஸ் அணியினர் பங்கேற்கவில்லை.இதனிடையே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஈபிஎஸ் தரப்பு சார்பில் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் துரைசாமி பங்கேற்றார்.