ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்தால் நடக்காது - இபிஎஸ்

 
eps

ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்தால் நடக்காது எனவும், காலச்சக்கரம் சுழன்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் தலைவாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சேலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. தமிழகத்தில் வேண்டுமானால் திமுக ஆட்சியாக இருக்கலாம், ஆனால் சேலத்தில் அதிமுக தான். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை சாதனை படிக்கட்டுகளாக மாற்றுவோம். கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆரின் சொத்தை சிலபேர் அபகரிக்க பார்க்கின்றனர். அதிமுக உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அதனை தொட்டுப்பார்க்க முடியாது. ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தை வைத்து அதிமுக.,வை செயல்பட விடாமல் முடக்க பார்க்கிறார். ஸ்டாலின் அதிமுக.,வின் ஒரு தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது.

eps

துரோகிகளும், திமுக.,வும் சேர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிமுக.,வை அழிக்க நினைத்தால் நடக்காது. காலச்சக்கரம் சுழன்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இப்போது அமைச்சர்களாக இருக்கும் 13 பேர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா? அவர் கட்சியில் இருந்து கைவிடப்படும் சூழலில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசி கட்சியில் பொறுப்பு வகிக்க பார்க்கிறார். நாங்கள் பேச ஆரம்பித்தால், திமுக தலைவர்கள் நாறிப்போய்விடுவார்கள். அதிமுக தொண்டர்கள் உழைத்து வாழ்பவர்கள், அன்னக்காவடிகள் கிடையாது, திமுக.,வை போன்று சுரண்டி வந்தவர்கள் அல்ல. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.