பொங்கல் பரிசு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

 
eps

எதிர்க்கட்சியாக இருந்த போது பொங்கல் பரிசு தொகுப்பாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்திய திமுக தற்போது அதனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடில்லாமல் தவித்து வந்த நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தனது சொந்த செலவில் 20 வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில், இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 20 வீடுகளையும் திறந்து வைத்தார். 

இதனை தொடர்ந்து அந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம். 20 நரிக்குறவர்களின் குடும்பங்களில் நாம் சிரிப்பை காண்கிறோம். இதுதான் அ.தி.மு.க.. இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதில் முதலிடம் தமிழ்நாடு. இதை உருவாக்கி காட்டியது அதிமுக. அரசு பொங்கல் தொகுப்பு என்கிற பெயரில் தொகுப்பு பொருட்களை தற்போது அறிவித்தார்கள். ஆனால் அதில் கரும்பை தவிர்த்து விட்டார்கள். கரும்பு தான் நமது பாரம்பரிய பழக்கம். ஆனால் கரும்பை கூட வழங்காமல் நிராகரித்து விட்டார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்று போராட்டத்தினை அறிவித்தது. அதன்பின்னர் தான் தற்போது கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்துள்ளனர். 

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் பொங்கல் தொகுப்பு என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2500 அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார். ஆனால் தற்போது 1,000 ரூபாய் தான் வழங்குகிறார். கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.