சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி

 
eps

சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என ஆளுங்கட்சியினர் பொய் சொல்கின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. அன்று முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கியுள்ளது. இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.  
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். முகலிவாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து சென்று பொதுமக்களின் சிரமங்களை நேரில் பார்த்தார். அப்போது மின்சாரம் உள்ளதா? அரசு உதவிகள் கிடைத்ததா? வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என்று கேட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

eps

இதையடுத்து சென்னை மதனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை. பல பகுதிகளில் மழைநீர் வடியாததால் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் முறையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவசர கோலத்தில் திட்டமிடாமல் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டதால்தான் மழைநீர் தேங்குகிறது. சென்னையில் மிதமான மழையே பெய்துள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.