ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக தேர்தல் பணி குழு அமைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது.
மேலும் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் . முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 16 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் தமிழ் மகன் உசேன் , கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் , பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ,ஜெயக்குமார் ,சி.வி சண்முகம், செம்மலை ,தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜு தனபால், kp அன்பழகன், காமராஜ், ஓ.எஸ். மணியன் , கோகுல இந்திரா, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர் , கடம்பூர் ராஜு , ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி , பெஞ்சமின் , கருப்பசாமி பாண்டியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன் , வேணுகோபால், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் , ராஜன் செல்லப்பா, பாலகங்கா, வைகைச் செல்வன் , செல்வராஜ், மோகன் , கமலக்கண்ணன், ராஜு , விஜயகுமார் , சிவபதி, சொரத்தூர் ராஜேந்திரன் , முக்கூர் சுப்பிரமணியன், செல்ல பாண்டியன், தாமோதரன் உள்ளிட்ட 106 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.