மயிலாடுதுறை செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
வரலாறு காணாத மழையினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு செல்கிறார்.
வடகிழக்கு பருவமழையினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் கடந்த 11ஆம் தேதி அன்று 44 சென்டிமீட்டர் மழை பெய்தது. வரலாறு காணாத இந்த கனமழையினால் குடியிருப்புகள், விளைநிலங்கள் முழுவதும் வெள்ளைக்காடாக மாறின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சீர்காழியில் பெய்த இந்த மழையினால் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்று பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.