இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு

 
evks son

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் படி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு அளித்தார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  

இந்த தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார். அதற்கு பதில் தனது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சஞ்சய் சம்பத் தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு கொடுத்தார்.