கமல்ஹாசனுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

 
kamal and evks

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். 

Kamal

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.