தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அமித் ஷாவிடம் கூறினோம் - இபிஎஸ் பேட்டி

 
eps

மத்திய உள்துறை அமைச்சரிடம் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை எனவும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

டெல்லி சென்றுள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாம் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அமித் ஷாவுடனான சந்திப்பிற்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இதில் அரசியல் தொடர்பாக ஏதும் பேசவில்லை. பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிப்பு பற்றி அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பற்றி உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் கொலை, கொள்ளை,பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி மத்திய உள்துறை மந்திரியிடம் கூறினேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.