ஓபிஎஸ் முடிவால் அதிர்ந்து போன ஈபிஎஸ் தரப்பு - தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை

 
admk office

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அ.ம.மு.க.வும் தனியாக போட்டியிடுகிறது. 

இந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் திடீரென முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் கமலாலயம் சென்று பா.ஜ.க முக்கிய தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.