எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் - சபாநாயகர் உடன் இபிஎஸ் தரப்பு சந்திப்பு

 
ep

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல் அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டார். இது தொடர்பான கடிதத்தை அதிமுக தலைமை கழகம் சபாநாயகருக்கு அனுப்பிய நிலையில், அதனை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்றா பதவியே இல்லை எனவும், அது அவர்களது கட்சியால் உருவாக்கப்பட்டது என்பதால் அதில், தான் எப்படி முடிவு எடுக்க முடியும் எனவும் சபாநாயகர் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்தாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அருகருகே இருக்கைகள் இருந்தன. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர. அப்போது எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி கடிதம் அளித்தாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.